Tuesday, September 27, 2011

ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்

லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து..

எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் சத்தியத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள், தோழர்கள், மற்றும் சத்தியத்தைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக..!

எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அவன் மொழிகின்ற கலிமாவான ஷஹாதத்தாக இருக்கட்டும், தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஸகாத் மற்றும் தான தர்மங்களாக இருக்கட்டும், வாழ்நாளில் ஒருமுறை வசதிவாய்க்கப்பட்டவர்களுக்காக கடமையாக்கப்பட்டிருக்கும் ஹஜ்ஜாக இருக்கட்டும்.., இவை அனைத்தும் ஒரு உயரிய நோக்கத்திற்காகவே கடமையாக்கப்பட்டிருக்கின்றன.

எவ்வாறு வானமும், பூமியும், அண்ட சராசரங்களும் இந்த பிரபஞ்ச வாழ்க்கைக்கான பங்களிப்பிற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதனைப் போலவே மனிதனும், அவன் மீது இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற வழிமுறைகளும் ஒரு உயரிய நோக்கத்தைக் கொண்டவையாக உள்ளன.

சூரியன் வெப்பத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்திற்கான தனது பங்களிப்பை வழங்க வேண்டும். இதில் தடைகள் ஏற்படுமென்றால், இந்த பிரபஞ்ச வாழ்வில் பல்வேறு தடைகளும், குழப்பங்களும், ஒழுங்கீனங்களும் ஏற்பட்டு விடும்.

அந்த வகையில் தான் இந்த பிரபஞ்சத்தின் பிரதான படைப்பாகிய மனிதனும்..! அவனுக்குரிய கடமைகளை அவன் முழுமையான நிறைவேற்றியாக வேண்டும். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய வழிமுறைகளை இறைவன் வழங்கியிருக்கின்ற பிரகாரம் அவன் அதனை நிறைவேற்றியாக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறும்பட்சத்தில், இந்தப் பூமியில் குழப்பங்களும், மாச்சரியங்களும் தலை விரித்தாடத் துவங்கும்.

எனவே, இந்த குழப்பமில்லாத வாழ்க்கைக்கு பயிற்றுவிக்கக் கூடிய பயிற்சிக் களமாகத் தான் இறைவன் கடமையாக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கடமைகளும் அமைந்திருக்கின்றன. அதில் இந்த ஹஜ் என்னும் கடமையானது, மிகவும் உன்னதானதொரு வழிமுறையையும், முழுமையான பயிற்சியையும் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கக் கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது.

இதில் ஓரிறைக் கொள்கை, இஸ்லாமிய குடும்ப அமைப்பு, பிரச்சாரப் பணி, தியாகம், பொறுமை, சகிப்புத் தன்மை, வாழ்க்கை முறைகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...