Thursday, May 19, 2011

மெரீனாவில் மாயமான சிறுமி மீட்பு: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காணாமல் போன 5 வயது சிறுமி தம்மன்னா மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ராயப்பேட்டை அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் சையது நூர் அகமது. மருந்துக்கடை அதிபர். அவரது மனைவி ஹசீனா. அவர்களுக்கு தம்மன்னா, ரிகாத் என்னும் 5 வயது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.


சையது நூர் அகமது கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்துடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். அங்கே பஞ்சு மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமி திடீர் என்று மாயமானாள்.
மகளைக் காணாமல் பெற்றோர் கண்ணீர் விட்டு கடற்கரை முழுவதும் தேடினர். ஆனாலும் பலனில்லை. இதையடுத்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாக் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனாலும் சிறுமி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிறுமியின் படத்துடன் கூடிய போஸ்டர்கள் தமிழகம் மற்றும் ஆந்திராவிலும், திருப்பதி கோயில் அருகிலும் ஒட்டப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டது. அந்த போஸ்டரில் இருந்த எண்ணைப் பார்த்து ராஜவேலு என்னும் வாலிபர் தம்மன்னாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு தான் சிறுமியை திருப்பதி கோயில் அருகே ஒரு பெண்ணுடன் பார்த்ததாகத் தெரிவித்தார்.
நூர் முகமது இது பற்றி போலீசில் கூறினார். உடனே தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்தனர். இந்நிலையில் சிறுமி தம்மன்னா மீட்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், சிகிச்சைக்காக சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே மெரினா கடற்கரையில் கடந்த 15-ம் தேதி ஐஸ்வர்யா(11) என்ற மன வளர்ச்சி குன்றிய சிறுமி காணாமல் போனாள். கலங்கரை விளக்கம் அருகே அழுது கொண்டிருந்த சிறுமியை மீனவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். பிறகு போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...