சென்னை: பள்ளி வாகனங்களுக்கான புதிய போக்குவரத்து வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த ஸ்ருதி பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து இறந்தார். கடந்த மாதம் 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை அரசு அதிகாரிகள் சோதனை செய்து புதிய கட்டுப்பாடுகள் விதி்ததனர்.
இதற்கிடையே பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய போக்குவரத்து விதிகளை வகுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் உள்பட பல தரப்பைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய போக்குவரத்து விதிகளை அமைக்க தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய போக்குவரத்து வரைவு விதிகள் தயாராக உள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.